ஐசிஎப் பில் புதிய சாதனை - ஹைட்ரஜன் இரயில் வெற்றிகர சோதனை!
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி ஆலையில் 118 கோடி ரூபாய் செலவில் ஹைட்ரஜன் இரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக இந்த புதிய தொழில்நுட்ப இரயில் உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரயில் இயங்கும் போது நீராவி மட்டுமே வெளியேறும். அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த இரயில் இரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் – லலித் கேரா இடையே பல கட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சோதனையின் ஒரு பகுதியாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரயிலில் மொத்தம் பத்து பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் வரை பயணம் செய்ய முடியும். இரயில் இயந்திரம் 1,200 குதிரை திறன் கொண்டதாகவும் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்