இந்தியாவில் ஏஐ புரட்சிக்கு ரூ.72 கோடி கூகுள் முதலீடு: அசத்தப்போகும் புதிய தொழில்நுட்பம்!

 | 
Google invest 75crores for new AI technology

இந்தியாவைச் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையின் உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில், கூகுள் நிறுவனம் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி உட்பட இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஏஐ மையங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 72 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கப்போவதாகக் கூகுள் அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற 'லேப் டு இம்பாக்ட்' (Lab to Impact) என்ற முக்கிய நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்துகொண்டு, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது ஒரு மைல்கல் என்று பாராட்டினார்.

இந்த நிதியுதவியானது பெங்களூரு ஐஐஎஸ்சி (IISc) -யில் உள்ள 'TANUH', கான்பூரில் உள்ள 'Airawat Research Foundation', சென்னை ஐஐடி-யில் உள்ள 'கல்விக்கான ஏஐ மையங்கள்' மற்றும் ஐஐடி ரோப்பாரில் உள்ள 'ANNAM.AI' ஆகிய நான்கு நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் வேளாண்மை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் தொற்றா நோய்களைக் கண்டறிதல் போன்ற மக்கள் நலன் சார்ந்த துறைகளில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, சாதாரண மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்கள் சென்றடையும் வகையில் இந்த ஆராய்ச்சி மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கூகுள் முன்னெடுத்துள்ளது. கூகுளின் புகழ்பெற்ற 'மெட்ஜெம்மா' (MedGemma) மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவிற்கான பிரத்யேக மருத்துவ ஏஐ மாதிரிகளை  உருவாக்க சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தோல் நோய்கள் மற்றும் மருத்துவமனை புறநோயாளி பிரிவு வகைப்பாட்டிற்கான ஏஐ கருவிகளை உருவாக்க, அஜ்னா லென்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும்போது, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு அடுத்த கட்டத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags