"உலகக் கோப்பை ஜெயிக்க வெச்ச அண்ணாமலையார்!" - 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்!

 | 
T20 WORLD CUP

டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தியும் வாஷிங்டன் சுந்தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து, 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் தமிழக வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது.

இந்தத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இக்கட்டான நேரங்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வாஷிங்டன் சுந்தர் கலக்கி இந்திய அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கினார்.

தொடர் முடிந்து தமிழகம் திரும்பிய இருவரும், நேற்றிரவு திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்துச் சிறப்புப் பூஜைகள் செய்தனர். பொதுவாகப் பிரபலங்கள் கார் அல்லது விஐபி தரிசனம் மேற்கொள்வார்கள். ஆனால், இந்த இரண்டு வீரர்களும் சாமானிய மக்களைப் போலவே இரவு நேரத்தில் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை நடந்தே சுற்றி வந்தனர். அதிகாலையில் கிரிவலத்தை முடித்த அவர்களைப் பார்த்த ரசிகர்கள், ஆச்சரியமடைந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags