19 வது ஆண்டு ’ஒரு குறள் – ஒரு டாலர்’ போட்டியில் 8 வயது சிறுவன் சாதனை!!
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர் பரிசுத் தொகையுடன், திருக்குறள் போட்டி தொடங்கப்பட்டது.

19வது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 8 வயது சிறுவன் ஆதவன் செந்தில்குமார் 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்து ”குறள் இளவல்” பட்டம் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளான்.

அமெரிக்காவில் பரவலாக நடைபெற்றுவரும் திருக்குறள் போட்டிகளில், டல்லாஸில் முதல் இரண்டு சாதனையாளர்க தொடங்கி பல்வேறு நகரங்களிலும் மாணவர்களும் பெரியவர்களும் 1330 குறள்களையும் ஒப்புவித்து தொடர் சாதனை படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்த இள வயது சிறுவன் ஆதவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், திருக்குறள்களில் எத்தனை சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன, எந்த எழுத்து பயன்படுத்தப்படவில்லை போன்ற தகவல்களையும் சொல்லி அசத்தி விட்டார் ’குறள் இளவல்’ ஆதவன். அமெரிக்காவில் பிறந்த ஆதவனின் தந்தை ராஜபாளையத்தையும் தாயார் புதுச்சேரியையும் சார்ந்தவர்கள்.

19வது ஆண்டு போட்டியில் 157 பேர் பங்கேற்றனர். 8 ஆயிரத்து 666 தடவை திருக்குறள்கள் ஒப்பிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்று 10 குறள்களை ஒப்புவித்தார் இரண்டு வயது மழலை வலமுயை பார்த்திபன்.
திருக்குறள் போட்டியுடன் நடைபெற்ற ஆத்திச்சூடி போட்டியில் 68 பேரும்., பேச்சுப் போட்டியில் 52 பேரும், கட்டுரைப் போட்டியில் 16 பேரும் பங்கேற்றனர். வேலு ராமன், விசாலாட்சி வேலு ஒருங்கிணைப்பில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்கள்.